Friday, December 13, 2013

வீரத்தின் தியாக வேங்கைக்கு இரும்புத்திரை போடுவதா?

 வாஸ்கோடகாமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498-ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்டு தீராத உட்பகை உருவாவதற்கும் காரணமாக இருந்தார்கள்.
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிற உணர்வும், ஊக்கமும், உத்வேகமும் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உருவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் தென்பகுதியிலும், நடைபெற்றதை யாரும் மறுக்க இயலாது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதல் குரல் தென்னகத்திலிருந்துதான் எழுந்தது என்பது சரித்திரம் மறைத்துவிட்டிருக்கும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்தக் கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும், தங்களின் ஆட்சி, அதிகாரத்துக்கு ஆபத்து வந்தபொழுது ஏற்பட்டவை என்பதால் இவை மக்கள் விடுதலைக்கான போராட்டங்களாகவும், நாடு தழுவிய ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாகவும் அமையவில்லையென இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (​IC​HR​ - Indi​an Coun​cil of Histori​c​al Rese​ar​ch) கருத்துத் தெரிவிக்கிறது. இது அறியாமையின்பாற்பட்ட, உண்மை நிலைமை உணராத கூற்று என்பதை நம்மில் யாரும் ஏன் குரலெழுப்பி மறுக்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
1800-1801-ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் உருவான புரட்சியும், போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், மலபார், கர்நாடகப் பகுதி வரையிலும் பரவி, குவாலியர் வரையிலும் எட்டியிருந்தது. இந்த ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சியை இந்திய வரலாற்று ஆய்வுக்குழு ​(IC​HR)​ ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது. அவர்களுக்கு இந்த மாமன்னர்களின் சுதந்திர வேட்கையும், மக்களை ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியும் தெரியாமல் போனதா? இந்திய வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்களம் கண்ட அரிய, தீரமிக்க நிகழ்ச்சியை இந்திய மண்ணில் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என எந்தச் சூழ்நிலையிலும் மறுத்துவிட இயலாது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1800-1801) நடைபெற்ற இந்த ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி, ஏன் உரிய முறையில், இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இன்றும் புதிராகவே உள்ளது.

இந்தியாவின் தென்பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தார்கள். பின்னர்தான் கொல்கத்தா சென்றார்கள். எனவே, ஆங்கிலேயர்கள் முதன் முதலாக அடியெடுத்து வைத்த இந்தத் தென்பகுதியில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை முதல் சுதந்திரப் போராட்டமாகப் பதிவு செய்யாமல், இதற்குப் பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து வடக்கே நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை (sepoy mutiny)​ இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்?
இத்தகைய சரித்திரப் பதிவு தென்பகுதி மக்களின் உச்சபட்ச தியாகத்தையும், போராட்டத்தையும் சிறுமைப்படுத்திவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது.

இந்த உண்மை நிலைமைகளை வெளிப்படுத்துவதால், 1857-ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதக்கூடாது. ஆனால், சரித்திர நிகழ்வுகளை காலத்தவறின்றி (​Chronologi​c​al re​cording)​ வரிசைப்படுத்திப் பதிவு செய்ய வேண்டும் என்பது சரித்திர ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடாகும். தவறான பதிவை நாம் திருத்தி எழுதியாக வேண்டும். தமிழன் செய்த தியாகம் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுவதை நாம் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்?

இதில் சில சரித்திர ஆசிரியர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழுவும் ​(IC​HR)​ தவறிழைத்துவிட்டதாகவே கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராஜய்யன்தான் தன்னுடைய வரலாற்று நூலான "தென்னாட்டுக் கிளர்ச்சிகள்' (நர்ன்ற்ட் ஐய்க்ண்ஹய் தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் 1800-1801)என்கிற ஆங்கில வரலாற்று நூலில் இதுபற்றி சரியாகப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தக் கிளர்ச்சியும், புரட்சியும்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். (ர.ட.சர். 36714/2006) பின்னர் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவினரிடம் ​(IC​HR)​ தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அந்த ஓய்வறியாத வரலாற்றுப் பேராசிரியர் ராஜய்யனை, மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு நாளில், வாழ்த்துவதும், வணங்குவதும் தமிழ் மக்களின் கடமையாகும்.

இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழு ​(IC​HR)​1800-1801-ம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி பற்றியும், ஆயுதப் போராட்டங்கள் பற்றியும், போராடியவர்களின் நோக்கங்கள், சிந்தனைகள், தேசியப்பற்று, இந்திய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்றே அறிய முடிகிறது.

1800-1801-ம் ஆண்டில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாமன்னர் மருதுபாண்டியர்கள், திருச்சி மலைக்கோட்டை ஆற்காடு நவாப்பு அரண்மனை வாயிலிலும், திருவரங்கம் கோயில் வாசலிலும் 1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் நாள் ஒட்டிய போர் பிரகடனம் (War De​cl​ar​ation) வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும்.

ஆங்கிலேயருக்கு எதிரான இந்த யுத்தப் பிரகடனத்தில் மருதுபாண்டியர்கள், ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் ஆயுதமேந்தவும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவும் தயாராக வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்கள். தன்னுடைய ஆளுகைப் பகுதிக்காகவோ அல்லது தன்னிடம் நட்புக் கொண்டவர்களுக்காகவோ மட்டும் அவர்கள் போராடவில்லை. மாறாக, இந்த மண்ணுக்கும், தங்கள் தங்கள் பகுதிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் சேர்த்தே போராடத் தயாரானார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. அவர்களது உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளிக்காதவர்களைக்கூட, அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என மருதுபாண்டிய மன்னர்கள் வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள் யுத்த களத்துக்குச் செல்லும் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதும் எனத் தெரிவிக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள், பசிக்குச் சோறு இல்லாமல் சோற்றுக் கஞ்சியே சாப்பிடுகிறார்கள், நம்முடைய கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து கொண்டிருக்கிறது என நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்தினார்கள் சிவகங்கைச் சீமையை ஆண்ட அந்தக் குறுநில மன்னர்கள். இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து குவாலியர் வரையிலும், தூதுவர்களை அனுப்பி ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.

போர்ப் பிரகடனத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களின் "அசைக்க முடியாத எதிரி'' என்றுதான் கையொப்பமிடுகிறார் மன்னர் மருது. இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம் பதினெட்டாம் நூற்றாண்டிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களால் அறிவிக்கப்பட்ட இந்தப் போர்ப் பிரகடனம் பற்றிய செய்தியையும், ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களையும் அவர்களது வாரிசுகளையும், சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் போராளிகள் 500 பேருடன் திருப்பத்தூர் கோட்டையில் கொடூரமாகத் தூக்கிலிட்ட துயரமான செய்திகளையும், அப்பொழுது இங்கு பணியாற்றிய ராணுவ அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து, அவரது வேண்டுகோளின்படி 1813-ம் ஆண்டு இங்கிலாந்தில், ஜே.கோர்லே என்பவர் புத்தகமாக வெளியிட்டுள்ளார். (`M​A​H​R​A​DU AN IN​D​I​AN ST​O​RY OF THE BE​G​I​N​N​I​NG OF THE NI​N​E​T​E​E​N​TH CE​N​T​​URY By J.GO​U​R​L​AY) இந்தப் புத்தகத்தில், மருதுபாண்டியர்களின் குடும்பத்தாரையும், சிறுவர்களையும் போராளிகள் 500 பேரையும் ஆங்கில ராணுவத்தினர், எந்தவிதமான அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் கொடூரமாகத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள் என்கிற கொடுமையான செய்தியை ராணுவ அதிகாரி என்பதால் என்னால் வெளி உலகத்துக்குத் தெரிவிக்க முடியாது. எனவே, தாங்களாவது உலகத்துக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்பத்தான், இந்த நூலை வெளியிடுகிறேன் என்று நூலாசிரியர் ஜே.கோர்லே முன்னுரையில் தெரிவிக்கிறார்.

மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தைக் குறிப்பிடுகிறபொழுது, கி.பி.85-ல் ரோமானியத் தளபதி அக்கிரிகோலா இங்கிலாந்து நாட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரிட்டானியப் படைகளை ஒருங்கிணைத்து, ரோமானிய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற பிரிட்டானியப் படையிடம், ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவரான கால்காகஸ் (A.D.85 Calg​a​cus' spe​ech to his troops)​ தன்னுடைய படை வீரர்களைப் பார்த்து வீரம் செறிந்த உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சிப் பிரவாகமாக மாறுகிறது பிரிட்டானியப் படை. அந்த வீரம் செறிந்த உரைக்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை நூலாசிரியர் ஒப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் நேர்மையும், நெஞ்சுரமும், விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாவீரர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தையும், பிரிட்டானியத் தளபதி கால்காகஸ் ராணுவ வீரர்களிடம் ஆற்றிய உரையையும் அவர் ஒப்பிடுகிறார்.

1813-ல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜே. கோர்லே மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை கி.பி. 85-ம் ஆண்டில் பிரிட்டானியத் தளபதியின் உரைக்கு ஒப்பிட்டு இருவரின் சுதந்திர வேட்கையையும், நாட்டுப் பற்றையும், நெஞ்சுரத்தையும் பாராட்டி அந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பதிவு செய்கிறார்.

ஆனால், இந்தியாவில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் குழு ​(IC​HR)​ 1800-1801-ல் நடைபெற்ற ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்தை முறைப்படி அங்கீகரித்துப் பதிவு செய்ய மறுக்கிறது. வேதனையானது, வினோதமானது, வேடிக்கையானது என்றெல்லாம் கூறுவதைவிட மாமன்னர் மருதுபாண்டியர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் இதற்குக் காரணமானது என்றுதான் நம்மால் கூறமுடிகிறது.

எந்தநாடு இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்யும் என்று எதிர்பார்த்தோமோ அந்த நாட்டில் இந்தச் செய்தி உரிய முறையில் வெளியாகி உள்ளது. ஆனால், எந்த நாட்டில் இந்தச் செய்தி அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமோ அந்த நாட்டில், இந்தியத் திருநாட்டில், இந்தச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்படுகிறது, தென்னகத்துத் தியாக வேள்வியை இரும்புத்திரை போட்டு மறைக்கும் இந்த முயற்சியை நாமும் முறியடிக்க மனமில்லாமல் மௌனம் சாதிக்கிறோம்.

இன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள். இந்த மண்ணை நேசிக்கும்,ஏன், இந்த மண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டால், உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் மருதுபாண்டியர்களின் வழிவந்தவர்களின் உணர்வுகள் முற்றிலும் மறைந்து போய்விடவில்லை. அவர்கள் சார்பாக தெரிவிப்பதெல்லாம், மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகரற்ற, உலகம் போற்றும் வீரத்தை போர்க்களத்தில் எதிர்கொண்ட ஆங்கில ராணுவத்தின் தளபதி ஜெனரல் வெல்ஸ் மனம் திறந்து பல படப் பாராட்டினார் - பதிவும் செய்து வைத்திருக்கிறார்.

அவர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும் சுயமரியாதையையும் கி.பி. 85-ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு.