Sunday, June 28, 2015

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் சிறப்புகள் மற்றும் வரலாறு



கிளி வடிவில் வந்த அம்மன்! தேவதான அற்புதங்கள்
தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக திகழ்வது தேவதானம். மற்றவை: சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்த நல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று). மகா சிவராத்திரி அன்று இந்த ஐந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தேவ தானம். இங்குள்ள பெரிய கோயிலுக்கு, சுமார் 1,000 ஏக்கர் நிலம் தானம் அளிக்கப்பட்டதால், இத்தலம் 'தேவ தானம்' என்று பெயர் பெற்றதாம்.



இங்கு, சரக்கொன்றை மரத்தடியில், ஈஸ்வரனை தியானித்து தவம் இருந்ததால் அம்பிகைக்கு, 'தவம் பெற்ற நாயகி' என்று பெயர். அவளது தவத்தால் மகிழ்ந்து காட்சி கொடுத்தவர் ஆதலால் ஸ்வாமிக்கு, அம்மையப்பன் எனப் பெயர். 'நச்சாடை தவிர்த்த லிங்கம்' என்றொரு பெயரும் உண்டு.

பாண்டிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட குறுநில பகுதி சேத்தூர். ஒரு முறை விக்கிரம சோழன் சேத்தூரின் மீது படையெடுத்தான். இதை எதிர் கொள்ள முடியாத சேத்தூர் படைகள்,தேவதானம் பெரிய கோயிலில் தஞ்சம் அடைந்தன. அன்று இரவு, சேத்தூர் மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், சோழப் படையை முற்றுகை இடுமாறும், சிவகணங்களுடன் தானும் போரில் கலந்து கொண்டு உதவுவதாகவும் அருளினார். அதன்படியே சோழர் படை தோற்கடிக்கப்பட்டது (இப்படி இறைவனே வந்து சேவகம் புரிந்ததால், சேத்தூர் அரசர்கள் 'சேத்தூர் சேவகப் பாண்டியர்' எனச் சிறப்பு பெற்றனராம்!).



போரில் வெல்ல முடியாத மன்னனை சூழ்ச்சி யால் வெல்ல முடிவு செய்தான் சோழன். சேத்தூர் அரசர் தினமும் திருக்குளத்தில் நீராடி, நித்தியகோடி (தினமும் புதிய ஆடை) அணிந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி... நித்திய கோடிக்கு பதிலாக நச்சு (விஷம்) தோய்ந்த ஆடையை அணியச் செய்து, சேத்தூர் அரசரைக் கொல்வதே சோழனின் திட்டம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான்.

இந்த நிலையில் சேத்தூர் அரசரின் கனவில் தோன்றிய இறைவன், மறு நாள் நித்தியகோடி அணிவதைத் தவிர்த்து அதை, லிங்கத் திருமேனிக்கு சார்த்துமாறு ஆணையிட்டு, அவனது உயிரைக் காப்பாற்றினாராம்! எனவே இவ்வூர் ஈசனுக்கு, 'நச்சாடை தவிர்த்தார்' என்று பெயர்.

சேத்தூர் அரசர், நித்தியகோடியை லிங்கத் திருமேனியில் அணிவித்த அதே நேரம் சோழ மன்னனின் பார்வை பறிபோனது. இதனால் வருந்திய சோழன் இறைவனிடம் மன்றாடினான். 'சேத்தூரில் ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டால் ஒரு கண்ணும், தேவதானம் சென்று வழிபட்டால் மற்றொரு கண்ணும் பார்வை பெறும்!' என்று அருளினார் இறைவன். அதன்படியே சேத்தூரில் திருக்கண்ணீஸ்வரர் ஆலயம் எழுப்பி வழிபட்டு ஒரு கண்ணிலும் பிறகு, தேவதானம் வந்து வழிபட்டு மறு கண்ணிலும் பார்வை பெற்றானாம் சோழன்!



இந்தத் தலத்தில் நிகழ்ந்த இன்னோர் அற்புதம்: புலவர் ஒருவர், 'சேத்தூர் தல வரலாறு' எனும் தனது நூலை பெரியகோயிலில் அரங்கேற்றினார். அப்போது, 'இந்த நூலில் குறை உள்ளது!' என்று வாதிட்ட சந்திரா அமுதன் என்ற கவிஞர், ''இறைவ னின் அங்கீகாரம் இல்லாமல் நூலை ஏற்க முடியாது!'' என்றார். அப்போது, திடீரென பெருமழை பெய்தது. அதையே இறைவனின் அங்கீகாரமாக ஏற்கலாம் என்று அவையினர் கூறியும் சந்திரா அமுதன் ஏற்கவில்லை. இதனால் கலங்கிய புலவர், மனதார பிரார்த்தித்தார். அப்போது, அம்பாளின் சந்நிதியில் வசித்த கிளி ஒன்று, அவளின் கரத்தில் இருந்த பூச்செண்டு மற்றும் அவளின் மோதிரம் ஆகிய வற்றை தனது அலகால் கவ்வியபடி பறந்து வந்து, புலவரிடம் கொடுத்து, 'சரி...சரி!' என்றதாம்! இதைக் கண்டு அனைவரும் வியந்தனர். சந்திரா அமுதனும், புலவரது நூலை ஏற்றார். புலவருக்கு 'பொன்னா யிரக் கவிராயர்' என்ற பட்டமும் கிடைத்தது.

மன்னர்கள், புலவர்கள் மட்டுமின்றி ஏழை விவசாயிக்கும் அருள் பாலித் தவர் இங்குள்ள ஈசன்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், ஏழை விவசாயி ஒருவர் இங்கு வாழ்ந்தார். அவருக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளும் மணப்பருவம் எய்தும் முன்பே அடுத்தடுத்து இறந்து போயினர். இதனால் வருந்திய விவசாயி, தேவதானம் வந்து இறைவனிடம், மனமுருகிப் பிரார்த்தித்தார். அங்கிருந்த பெரியவர் ஒருவர், ''இனி, உனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்குள்ள இறைவனின் பெயரைச் சூட்டுவதாக வேண்டிக்கொள்; எல்லாம் நலமாகும்!'' என்றார். அதன்படியே அடுத்துப் பிறந்த குழந்தைகளுக்கு நச்சாட லிங்கம், அம்மையப்பன், பரமசிவன் என்று பெயர் வைத்தார்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள், மகன் அம்மையப்பனை விஷக் காய்ச்சல் தாக்கியது. மருத்துவர்களும் கைவிரித்து விட... மனம் வருந்திய விவசாயி, மகனைத் தூக்கிக் கொண்டு பெரிய கோயிலுக்கு ஓடோடி வந்தார். அங்கு, கொடி மரத்தடியில் குழந்தையைக் கிடத்தி மனம் உருகப் பிரார்த்திக்க... இதுவரை பேச்சு- மூச்சில்லாமல் கிடந்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. சிவனருளை நினைத்து கண்ணீர் உகுத்தார் விவசாயி.

இந்தத் தலம் சேர நாட்டுடனும் தொடர்பு கொண் டது என்கிறார்கள். கேரள சிவாலயங்களில் கொடி மரத்தின் அருகில் ஆமையின் வடிவம் அமையப் பெற்றிருக்கும். இது, 'கோயிலுக்குள் செல்லும் போது ஐம்புலன்களையும் அடக்க வேண்டும்!' என்பதை உணர்த்தும். இத்தகைய அமைப்பு தமிழகத்தில் தேவதானம்- பெரிய கோயில் மற்றும் வில்லிப்புத்தூரில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் முதலான சில தலங்களில் மட்டுமே உள்ளது. எனவே, இந்தக் கோயில்கள், பந்தள மகாராஜாக்களின் கட்டுப்பாட்டில் இருந்து... பிறகு, பந்தளம் சேர நாட்டுடன் இணைந்ததன் விளைவாக சேத்தூர் குறுநில மன்னர்களது கட்டுப்பாட்டுக்கு வந்ததாகக் கூறுவர்.

ஆயிரம் ஏக்கர் சொந்தமாக இருந்தும், முறையான வருவாய் இல்லாததால் பூஜை- விழாக்கள் எதுவு மின்றி களையிழந்து காணப்படுகிறது இந்த திருக்கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரும் பழுதடைந்துள்ளது.





நன்றி : http://hinduspritualarticles.blogspot.in

Tuesday, November 11, 2014

GLOBAL SERVICE CENTER RAJAPALAYAM

ஏசி , பிரிட்ஜ் , வாஷிங் மெசின் சர்வீஸ் செய்ய சிறந்த சர்வீஸ் சென்டர்
GLOBAL SERVICE CENTER

Thursday, August 21, 2014

தேவதானம் தேர் திருவிழா

கடந்த ஜூன் மாதம் 10 ம் தேதி தேவதானம் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள் சில ...........